நல்லகண்ணு மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில் அஞ்சலி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தபோது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்துத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ‘பாலன் இல்லத்திற்கு’ நல்லகண்ணுவின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் வருகை தந்து நல்லகண்ணுவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கிருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், குடும்பத்தினருக்கும் அவர் தனது ஆறுதல்களைத் தெரிவித்தார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவது, அவர் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.