திருக்கோஷ்டியூர் கோவிலில் துர்கா ஸ்டாலின் வருகை: பொது தரிசனம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்து வழிபாடு நடத்தினார். அவரது வருகையையொட்டிப் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் நேரில் சென்று வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அவர் சௌமிய நாராயண பெருமாளைத் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார்.
முன்னதாக, அவரது வருகையை முன்னிட்டு சுமார் 20 நிமிடங்கள் பொதுமக்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், விஐபி வருகைக்காகத் தங்களின் வழிபாடு தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டு அதிருப்தி அடைந்தனர். இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தரிசனம் முடிந்த பின்னர் துர்கா ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.