மகளா? தங்கையா? அடுத்த தலைவரைச் சுற்றி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரிய அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வாரிசு விவாதம் சூடுபிடித்துள்ளது. குடும்ப வாரிசு மரபை தொடர்ந்து அடுத்த தலைவராக யார் வருவார் என்ற கேள்வி உள்நாட்டிலும், உலகளாவிய அளவிலும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவுடன் மோதல் நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் வட கொரியா, அணு ஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் தாண்டும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு நிகழ்வுகள் கடுமையான ரகசியத்திலும், கட்டுப்பாடுகளுடனும் வைக்கப்படுகின்றன.
கொரியப் போருக்குப் பின்னர் கொரியத் தீபகற்பம் இரண்டாகப் பிரிந்தது. அதன்பிறகு வட கொரியாவில் கிம் குடும்பத்தினர் தலைமையேற்று ஆட்சி செய்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு தந்தை கிம் ஜாங் இல் மறைவுக்குப் பின்னர் கிம் ஜாங் உன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
சகோதரியா? மகளா?
கிம் ஜாங் உன்னுக்கு அடுத்ததாக அவரது சகோதரி கிம் யோ ஜாங் தலைமை பொறுப்பேற்பார் என்றே நீண்ட காலமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலங்களில் தனது மகள் கிம் ஜு ஏ-வை முக்கிய அரச நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்தி வருவது புதிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது.
இதனால், கிம் வம்சத்தில் மீண்டும் வாரிசு புயல் வீசத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
2013ஆம் ஆண்டு அதிர்ச்சி சம்பவம்
2013 ஆம் ஆண்டு வட கொரிய அரசியலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. கிம் ஜாங் உன்னின் மாமாவும், நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜாங் சாங் தேக் தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ராணுவ தீர்ப்பாய விசாரணைக்கு பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
நீண்ட காலமாக நாட்டின் இரண்டாவது முக்கிய நபராக கருதப்பட்ட அவர், ஊழல், சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் உட்படுத்தப்பட்டார்.
வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கொரிய மத்திய செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. அவரது மரண தண்டனை தொடர்பான விவரங்கள் உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.
சர்வதேச எதிர்வினை
ஜாங் சாங் தேக் மரணத்திற்குப் பின்னர், தென் கொரியா அவசர பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கூட்டியது. சீனா இந்த விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என தெரிவித்தாலும், பொருளாதார உறவுகள் பாதிக்கப்படுமா என்ற கவலை ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது.
வாரிசு அரசியல் மீண்டும் மையம்
தற்போது, கிம் ஜாங் உன் தனது மகளை எதிர்காலத் தலைமைக்காக முன்னிறுத்துகிறாரா? அல்லது நீண்ட காலமாக அதிகார வட்டாரத்தில் செல்வாக்கு கொண்டுள்ள கிம் யோ ஜாங் தலைமை ஏற்கிறாரா? என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது.
வட கொரியாவில் வாரிசு அரசியல் எளிதான நடைமுறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், கிம் குடும்பத்திற்குள் மீண்டும் உருவாகியுள்ள இந்த வாரிசு விவாதம், அந்நாட்டு அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.