திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார் – வைரலாகும் வீடியோ
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, முதியவர் ஒருவர் நடத்திய தற்காலிக கடையை போலீசார் எட்டி உதைத்து சூறையாடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமயம் அருகேயுள்ள நெய்வாசல் பகுதியில், போலீசாரின் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போட்டியை தடுத்து நிறுத்தினர்.
இதனால், மஞ்சுவிரட்டு போட்டிக்காக வந்திருந்த காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அந்த பகுதியில் முதியவர் ஒருவர் தண்ணீர் பாட்டில், பழங்கள், கூல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தற்காலிகமாக கடை அமைத்திருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார், கடையில் இருந்த பொருட்களை காலால் உதைத்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஏழை முதியவரின் கடையை போலீசார் சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.