கோவை சிங்காநல்லூரில் அடகு கடை உடைப்பு – 100 சவரன் நகைகள் கொள்ளை
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள அடகு கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை – திருச்சி சாலையில், சிங்காநல்லூர் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், கடை மூடப்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து, தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.