அவதூறு வழக்கு: டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் எழுப்பிய அண்ணாமலை
அவதூறு வழக்கு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான அண்ணாமலை நேரடியாக குறுக்கு விசாரணை நடத்தி, திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலுவிடம் தொடர் கேள்விகளை எழுப்பினார்.
2023 ஏப்ரல் 14ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “DMK FILES” என்ற பெயரில் சில அரசியல் தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டிருந்தார். அதில், டி.ஆர்.பாலுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், 21 நிறுவனங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற அனுமதியுடன் அண்ணாமலை நேரடியாக குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் போது, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் டி.ஆர்.பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக அழகிரி கூறிய தகவல் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பினார். அதற்கு, 10 கப்பல்கள் வாங்கியதாக கூறியது தவறான தகவல் என்றும், தான் இரண்டு கப்பல்கள் மட்டுமே வாங்கியதாகவும் டி.ஆர்.பாலு பதிலளித்தார்.
மேலும், டி.ஆர்.பாலுவின் 18 கார்கள், அவரது மகன் ராஜ்குமார் நடத்தும் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலை உள்ளிட்டவை குறித்தும் அண்ணாமலை தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பினார். பல கேள்விகளுக்கு டி.ஆர்.பாலு “தெரியாது”, “சரியல்ல” என சுருக்கமாக பதிலளித்தார்.
குடும்பத்தினர் நடத்தும் சாராய ஆலை குறித்த கேள்விக்கு, அது ரசாயன ஆலை என்றும், அதில் தான் சிறிய பங்குதாரர் மட்டுமே என்றும் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், அண்ணாமலை தனது மனைவி பெயரில் சொத்துகள் வாங்கியுள்ளதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டி, ஊழல் குற்றச்சாட்டால் தான் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியதாக கூறி, டி.ஆர்.பாலு மீது விரைவில் அவதூறு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறுக்கு விசாரணை முழுமையாக நிறைவடையாததால், வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.