கொடைக்கானலில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை: சுற்றுலா பயணிகள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் நடமாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கானலில், அண்மைக்காலமாக தெருநாய்க்கடிக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
கொடைக்கானல் பேருந்து நிலையம், ஏரி சாலை, அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போட வேண்டும் என்றும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடைக்கானல் வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.