அமைச்சர் வருகை தாமதம்: மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட நிகழ்ச்சியில் பயனாளிகள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தாமதமானதால், பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பயனாளிகளுக்கு வாகனங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, பயனாளிகள் அனைவரும் காலையிலேயே வரவழைக்கப்பட்டனர்.
ஆனால், அமைச்சர் வருகை தாமதமானதால், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடும் வெயிலில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.