அவிநாசியில் குப்பை எரிக்கும் போது மர்ம பொருள் வெடிப்பு: சுற்றுப்புறத்தில் பயங்கர அதிர்வு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் ஒன்று வெடித்ததால், சுற்றுப்புறப் பகுதியில் பயங்கர அதிர்வு ஏற்பட்டது.
அவிநாசி சேயூர் சாலையில் செயல்பட்டு வரும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை குப்பையுடன் சேர்த்து எரித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பலத்த சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.
இந்த சம்பவத்தில் சுற்றுவட்டார கடைகளில் லேசான சேதம் ஏற்பட்டது. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள், தீயை அணைத்ததுடன் நிலைமையை ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.