ஒரே குடும்பத்துக்கு 7 இலவச வீட்டுமனைப் பட்டா: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7 பட்டாக்கள் வழங்கப்பட்டதாக எழுந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர், அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாகவும், அவை ரத்து செய்யப்பட்ட பின்னரும் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து வருவதாகவும் கூறி, அரசு நிலத்தை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற தடையை மீறி தற்போது வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ஏற்கனவே பரமக்குடி வருவாய் அலுவலரால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வசதிபடைத்த நபர் ஒருவர் அரசு நிலத்தை முறைகேடாகப் பெற்று, பட்டா ரத்து செய்யப்பட்ட பிறகும் ஆக்கிரமிப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், முறைகேடாகப் பெறப்பட்ட நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.