எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி
திருச்சி: இயற்கை அழகால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
நகரிலிருந்து சுமார் 72 கிலோமீட்டரும், துறையூரிலிருந்து 27 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி, அடர்ந்த காடுகள், அமைதியான சூழல், குளிர்ச்சியான நீரூற்றுகள் ஆகியவற்றால் பிரசித்தி பெற்றது. அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்குள்ள நீரோடைகள் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மூலிகைச் செடிகள் மற்றும் மரங்களை கடந்து வரும் நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோடைக்காலங்களில் வெப்பத்திலிருந்து தப்பிக்க, திருச்சி மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். இந்த சுற்றுலாத் தலம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், பெண்கள் உடை மாற்ற அறை இல்லாமை, போதிய குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாமை, குப்பைகள் அகற்றப்படாத நிலை, சீரமைக்கப்படாத நடைபாதைகள் போன்ற குறைகளை பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோடைக்கால வருகை அதிகரிக்கும் முன்பே தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.