மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க அரசால் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?
மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.5,000 வரவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. அப்போது அளிக்கப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதாகும். இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, சி. என். அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1,000 செலுத்தப்பட்டு வந்தது. பின்னர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
இம்மாத உரிமைத்தொகை 15ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய நிலையில், இன்று காலை பலர் எதிர்பாராத வகையில் ரூ.5,000 வரவு செய்யப்பட்டதை அறிந்து ஆச்சரியமடைந்தனர். குறுஞ்செய்தி மூலம் வந்த தகவலைக் கண்டு பலர் நம்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து வெளியிட்ட காணொளி செய்தியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ.5,000 வரவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். தேர்தல் சூழ்நிலையால் உரிமைத்தொகை வழங்குவதில் இடையூறு ஏற்படக்கூடும் என்பதால், முன்கூட்டியே ரூ.3,000 வழங்கப்பட்டதாகவும், கோடை கால சிறப்பு உதவியாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள், தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன.
எதுவாயினும், மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு இது எதிர்பாராத நிதி உதவியாக அமைந்துள்ளது. இதற்காக அரசு மொத்தமாக ரூ.6,550 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.