சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை எந்தவித பிணையமும் இன்றி கடன் வழங்க மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026–27 மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் துறையின் வளர்ச்சிக்காக ₹10,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கடன் அணுகலை எளிதாக்கும் வகையில் பிணையமில்லா கடன் வரம்பை ₹10 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக இரட்டிப்பாக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளால், இந்தியாவின் தொழில்துறை புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருவதாக கூறுவது மிகையல்ல என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்