மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் உரையில் வெளிப்பட்ட தமிழ் நேசம்
இந்தியாவின் அடையாளமாக உலகிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பண்பாட்டு கொடை தமிழ் மொழியே என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசிக்கும் இந்திய வேருடைய மக்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் ஆற்றிய உரை, தமிழ்மீது அவருக்குள்ள ஆழமான பற்று மற்றும் மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி, தமிழ் மொழியின் சிறப்பையும் பெருமையையும் மீண்டும் ஒருமுறை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார். தமிழின் பழமையும், அதன் வரலாற்று வளமும் தன்னை ஈர்த்துள்ளதாகக் கூறிய அவர், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தமிழ் மொழியின் மகத்துவத்தை உலகமெங்கும் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில், மலேசியாவில் வாழும் இந்தியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ் பண்பாடு எல்லைகளைத் தாண்டிய உலகளாவிய தன்மை கொண்டது என்றும், தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பெருமை உடையவை என்றும் பெருமையுடன் தெரிவித்தார். இந்தியா உலகிற்கு வழங்கிய மிகச்சிறந்த மொழிப்பாரம்பரியம் தமிழ் தான் என அவர் கூறியபோது, அரங்கம் முழுவதும் கைத்தட்டல் முழங்கியது.
மலேசியாவில் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருவது போலவே, இந்திய அரசின் உயர்மட்ட நிர்வாகத்திலும் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிட்டு, அவர்கள் வகிக்கும் உயர்பதவிகளை பாராட்டினார்.
மலேசியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையையும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, அந்நாட்டின் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இப்போது அந்த உறவை மேலும் ஆழப்படுத்தும் வகையில் “திருவள்ளுவர் மையம்” அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஒரு நிகழ்ச்சியில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பங்கேற்ற போது, எம்ஜிஆரின் “நான் ஆணையிட்டால்” பாடல் ஒலிக்க, அதற்கு அவர் நடனமாடியும் பாடியும் அனைவரையும் மகிழ்வித்த நிகழ்வை நினைவுகூர்ந்தார். அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அதனை தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அன்வர் இப்ராஹிம் ஒரு சிறந்த பாடகர் என மோடி பாராட்டியபோது, அவர் மிகுந்த உற்சாகம் அடைந்தார்.
உரையின் இறுதியில், இந்தியா–மலேசியா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த பிரதமர் மோடி, நன்றி தெரிவித்து உரையை நிறைவு செய்தார். அப்போது அரங்கம் முழுவதும் “மோடி… மோடி…” என்ற முழக்கத்தால் அதிர்ந்தது.