சென்னையில் மூன்றாவது நாளாக நீடித்த போராட்டம் – பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் கைது
சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பார்வை குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே, பார்வை மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும், பட்டப்படிப்பு முடித்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட மொத்தம் 9 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டம் மூன்றாவது நாளிலும் தொடர்ந்த நிலையில், மாணவர்கள் திடீரென நந்தனம் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்கள் அதனை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களை தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்