தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்
சென்னையில் குப்பைகளில் கிடைத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரான பத்மாவை, நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கி சிறப்பித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மாவுக்கு, பணியின்போது தங்க நகைகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த நகைகளை அவர், தனது மேலதிகாரியின் உதவியுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் அந்த நகைகள் மொத்தம் 45 சவரன் எடையுடையவை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையான செயலுக்கு பாராட்டு தெரிவித்து, அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கினார்.
ரஜினிகாந்தின் இந்த மனிதநேயமான செயல், சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது.