கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி
கொடைக்கானலில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மலைநகரமான கொடைக்கானலில் அமைந்துள்ள இந்த அரசு மருத்துவமனைக்கு, நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக கழிப்பறைகளில் தண்ணீர் வராததால், நோயாளிகள் அவசிய தேவைகளுக்காக மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அருகிலுள்ள பேருந்து நிலையம் அல்லது மருத்துவமனையின் பிற பிரிவுகளில் உள்ள கழிப்பறைகளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களில் இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லாதது பொதுமக்களின் சுகாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக நோயாளிகள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்க நேரிடுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகமும், மாவட்ட சுகாதாரத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிப்பறைகளில் தண்ணீர் வசதியை விரைந்து ஏற்படுத்தி, நோயாளிகளின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.