ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டு, நடப்பு ஆண்டில் இந்த தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பதவிகளுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்றும், அந்த தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் டெட் (TET) தேர்வை இரண்டு முறை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும். இரண்டாவது டெட் தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகி, டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில தகுதி தேர்வு (SET) ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அட்டவணைகள் மாற்றத்திற்குட்பட்டவை என்றும், காலிப்பணியிட விவரங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.