அமெரிக்க வரி நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி – டிரம்ப் நிர்வாகத்திற்கு செனட்டர்கள் அதிருப்தி
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30 சதவீத இறக்குமதி வரி விதித்திருப்பது, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் கெவின் கிராமர் மற்றும் மொன்டானா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் ஸ்டீவ் டெய்ன்ஸ் ஆகியோர் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா விதித்துள்ள 30 சதவீத இறக்குமதி வரி நியாயமற்றது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வரி விதிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்திருந்தது. அதற்கான பதிலடியாகவே இந்தியா பருப்பு வகைகளின் வரியை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இந்த வரி உயர்வு குறித்து இந்திய அரசு பெரிதாக விளம்பரம் செய்யவில்லை என்றாலும், அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு இந்தியா அளித்த அமைதியான ஆனால் வலுவான பதிலடி இது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.