டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: பிரதமரைச் சந்திக்க இன்று நேரம் கேட்டு காத்திருப்பு!
புதுடெல்லி: பாஜகவிலிருந்து விலகப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வதந்திகளும், பரபரப்பான ஊகங்களும் வெளியாகி வரும் வேளையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக பா.ஜ.க-வின் தற்போதைய தேர்தல் நிலவரங்கள் மற்றும் உட்கட்சிச் செயல்பாடுகள் குறித்த 5 பக்க விளக்கக் குறிப்பை வழங்கியதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவரது இல்லத்தில் சந்தித்துத் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி பயணத்தின் முக்கிய நிகழ்வாகப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அண்ணாமலை தரப்பில் முறைப்படி நேரம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமரின் அனுமதி கிடைப்பதற்காக அவர் டெல்லியிலேயே தொடர்ந்து காத்திருக்கிறார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் இக்கட்டான அரசியல் சூழலில், டெல்லியில் பா.ஜ.க மேலிடத் தலைவர்கள் மற்றும் பிரதமருடனான இந்தத் தொடர் சந்திப்பு முயற்சிகள் தேசிய அளவிலும், தமிழக அரசியல் களத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் உச்சக்கட்டப் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.




