அமெரிக்காவின் அதிநவீன மர்ம தாக்குதல்: ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவில் நடந்தது என்ன?
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்யும் நடவடிக்கையில், அமெரிக்கா இதுவரை வெளிச்சத்துக்கு வராத ஒரு விசித்திரமான ஆயுதத்தை பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு வீரர்களின் மூக்கில் இருந்து ரத்தம் சிந்தியதோடு, அவர்கள் உடல் முழுவதும் உறைந்து போனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஒரு நாட்டுக்குள் எந்தச் சத்தமும் இல்லாமல் நுழைந்து, அதிபரின் இல்லத்துக்குச் சென்று, பாதுகாப்பு வளையத்தை உடைத்து, நாட்டின் தலைவரையே கைது செய்வது சாத்தியமா? அதுவும் வெறும் 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்குள்?
ஜனவரி 3-க்கு முன்பு இந்த கேள்வி எழுந்திருந்தால், பெரும்பாலானோர் “அது நடக்கவே முடியாது” என்றே பதிலளித்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
இத்தகைய மாபெரும் நடவடிக்கையை இவ்வளவு குறுகிய நேரத்தில் மேற்கொள்ள, அமெரிக்கா மிக உயர்தர தொழில்நுட்ப வசதிகளையும், அதிநவீன ஆயுதங்களையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த ரகசிய ஆயுதங்கள் பற்றிய தகவல்கள்தான் தற்போது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அதிபர் மதுரோ கைது செய்யப்பட்ட தருணத்தில் நடந்த சம்பவங்களை, அந்த நேரத்தில் களத்தில் இருந்த வெனிசுலா பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஜனவரி 3-ம் தேதி, வெனிசுலாவின் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த அனைத்து ரேடார் அமைப்புகளையும் அமெரிக்க படைகள் ஒரே நேரத்தில் முடக்கிவிட்டதாகவும், அதன் பின்னர் எதிர்பாராத விதமாக தொடர்ச்சியாக ட்ரோன்களை ஏவி, வெனிசுலா படையினரை குழப்பத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் முன்பே, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் தலைநகர் கராகஸுக்குள் புகுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஹெலிகாப்டர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லை. சுமார் எட்டு விமானங்கள் மட்டுமே வந்ததாக நினைக்கிறேன். அதிலிருந்து இறங்கிய அமெரிக்க வீரர்களும் எண்ணிக்கையில் குறைவு. ஆனால் அவர்கள் அனைவரும் மிகுந்த தொழில்நுட்ப அறிவும், பயிற்சியும் பெற்றவர்கள்” என அந்த வீரர் கூறியுள்ளார்.
நூற்றுக்கணக்கான வீரர்கள் இருந்தபோதும், அமெரிக்க படையை எதிர்த்து நிற்க முடியவில்லை என்றும், அவர்கள் துல்லியமாகவும் அதிவேகமாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வீரரும் ஒரு நிமிடத்தில் சுமார் 300 குண்டுகள் வீசியதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
“அவர்கள் சாதாரண துப்பாக்கிச் சூட்டோடு நிற்கவில்லை. திடீரென ஒரு வித்தியாசமான தாக்குதல் எங்களை தாக்கியது. அதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. அது சக்திவாய்ந்த ஒலி அலை போல இருந்தது.
அந்த ஒலி கேட்டவுடன் தலை வெடித்துவிடும் போல் உணர்ந்தோம். சில நிமிடங்களில் எங்கள் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. சிலர் ரத்த வாந்தி எடுத்தனர். உடனே அனைவரும் தரையில் சரிந்தோம். எங்களால் உடலை அசைக்க கூட முடியவில்லை.”
அமெரிக்க தரப்பில் சுமார் 20 வீரர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவர்களில் ஒருவருக்கும் உயிரிழப்பு இல்லை என்றும், வெனிசுலா தரப்பில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் எதிர்த்து தாங்கள் நிற்க முடியவில்லை என கூறிய அந்த வீரர், இதுபோன்ற தாக்குதலை இதற்கு முன் ஒருபோதும் பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்:
“அமெரிக்காவை எதிர்க்கலாம் என்று யோசிப்பவர்கள் முதலில் அதன் திறனை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா என்ன செய்யும் என்பதை அதன் எதிரிகள் கூட முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள்.
அந்த தாக்குதலை நேரில் பார்த்த பிறகு, நான் ஒருபோதும் அமெரிக்காவின் எதிரணியில் நிற்க விரும்ப மாட்டேன். வெனிசுலாவில் நடந்த இந்த சம்பவம், இந்த நாட்டை மட்டுமல்ல, முழு பிராந்தியத்தையும் மாற்றும் சக்தி கொண்டது.”
இந்த வெனிசுலா வீரரின் வாக்குமூலம், அமெரிக்காவின் ராணுவ பலம் எந்த அளவிற்கு மேம்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, எதிரி வீரர்களை ரத்தம் வழியச் செய்து, உடலை அசைய முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் அந்த மர்ம ஆயுதம், தற்போது உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.