ஜனநாயகன் திரைப்படத்திற்கு புதிய தடங்கல் – தணிக்கை வாரியம் மேல்முறையீடு
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாவதில் மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, தணிக்கை வாரியம் மற்றும் திரைப்படக் குழு தரப்பில் தங்களது வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
விசாரணையின் போது, தணிக்கை குழு உறுப்பினர் ஒருவரின் புகாரை மட்டும் அடிப்படையாக கொண்டு சான்றிதழ் மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட நீதிபதி, படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், தலைமை நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனால், ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.