வங்கதேச அரசுக்கு 24 நாள் காலக்கெடு விதித்த மாணவர் அமைப்பு
வங்கதேசத்தில் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி கொலை தொடர்பான விசாரணையை 24 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளது. அதேசமயம், இந்தியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தியர்கள் யாரும் இந்த படுகொலையில் தொடர்பில்லாத நிலையில், இருநாட்டு உறவுகளை பாதிக்கும் வகையிலான இந்த கோரிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பெரும் மாணவர் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களுக்கு ‘இன்குலாப் மஞ்ச்’ (Inqilab Mancha) என்ற மாணவர் அமைப்பு தலைமை வகித்தது. அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றிணைத்து தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார். இந்த போராட்டங்களின் விளைவாக, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி கடந்த 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறுநாள் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹாடி மீது மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட வங்கதேச காவல்துறை, இதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாகக் கூறியது. உஸ்மான் ஹாடி கொலையில் தொடர்புடையதாக இரண்டு நபர்கள் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்கள் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஹலுகாட் எல்லை வழியாக இந்தியாவின் மேகாலயா மாநிலத்திற்குள் நுழைந்ததாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் டாக்ஸி மூலம் துரா நகரத்திற்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மேகாலயா காவல்துறையும், இந்திய எல்லை பாதுகாப்புப் படையும் முழுமையாக மறுத்துள்ளன. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மறுப்புகளையும் பொருட்படுத்தாமல், இன்குலாப் மஞ்ச் அமைப்பு இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வங்கதேசத்தின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை பாதுகாக்க இந்தியர்களுக்கான பணி அனுமதிகளை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஷேக் ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்ப மறுத்தால், சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, உஸ்மான் ஹாடி கொலை தொடர்பான அனைத்து விசாரணைகளையும் 24 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என இன்குலாப் மஞ்ச் அமைப்பு அதிகாரப்பூர்வமாக காலக்கெடு விதித்துள்ளது.
இதனிடையே, அந்த அமைப்பு சார்பில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், அந்நாட்டில் இந்துக்கள் மீது நடைபெறும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதால், வங்கதேசம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார். வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது இடைக்கால அரசின் முழுப்பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்த சூழலில், உஸ்மான் ஹாடி கொலை சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவை குற்றம்சாட்டி வரும் மாணவர் அமைப்பின் அணுகுமுறை, இந்தியா – வங்கதேச உறவுகளில் மேலும் பதற்றத்தையும், விரிசலையும் உருவாக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.