சட்டவிரோத குடியேறிகள் தாமாக வெளியேறினால் அபராதம் நீக்கம்
அமெரிக்காவில் சட்டத்திற்கு முரணாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள், தாங்களாக முன்வந்து நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றால் அவர்களுக்கான அபராதங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசித்து வந்த சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து, கைது செய்து சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அமெரிக்க நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் CBP செயலியில் பதிவு செய்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் தன்னார்வமாக நாட்டை விட்டு புறப்படும் சட்டவிரோத குடியேறிகளுக்கு 3,000 அமெரிக்க டாலர் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கான அபராதங்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், இலவச விமானப் பயண டிக்கெட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை எதிர்காலத்தில் மீண்டும் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்துள்ளது.