கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம்
கடலில் தவறி விழுந்து காணாமல் போன மீனவரை உடனடியாகக் கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அவரது உறவினர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர், நேற்று வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், எதிர்பாராத சூழலில் கடலில் தவறி விழுந்து மாயமானதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பிறகும், கணேசனை தேடிக் கண்டுபிடிக்க அதிகாரிகள் போதிய முயற்சிகள் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய அவரது குடும்பத்தினர், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மீனவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய அவர்கள், காணாமல் போன கணேசன் மீட்கப்படும் வரை யாருக்கும் கடலுக்குச் செல்ல அனுமதி சீட்டுகள் வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்.
இந்த திடீர் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.