அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கு வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
அணுசக்தி துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சாந்தி மசோதா, மக்களவையில் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கும் இந்த சட்ட முன்மொழிவு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதத்திற்காக தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவை அவைகளில் முன்வைத்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே, புதன்கிழமை மக்களவையில் ஒப்புதல் பெற்ற இந்த மசோதா, அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் அங்கீகாரம் பெற்றது.
இந்த சட்டத்தின் மூலம், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுசக்தி மின் உற்பத்தி திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், நாட்டின் அதிகரிக்கும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதுடன், 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற இந்த மசோதா முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.