சிபிஎம் ஆதிக்கத்தை உடைத்த பாஜக : தொடர்ச்சியான வெற்றிகளால் கேரளாவில் உற்சாகம்
கேரளாவில் நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான எண்ணிக்கையிலான வார்டுகளை கைப்பற்றி, மாநில அரசியல் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 1,597 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போதைய தேர்தலில் அந்த எண்ணிக்கை உயர்ந்து, 1,919 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது கேரளாவில் பாஜக ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம், கடந்த 45 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக இருந்து வந்தது. அந்த நீண்டகால ஆதிக்கத்தை உடைத்து, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 101 வார்டுகள் கொண்ட அந்த மாநகராட்சியில், 50 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. கேரள அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
அதேபோல், பாலக்காடு நகராட்சியிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்கு உள்ள 53 வார்டுகளில், 25 வார்டுகளை பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, கேரள பாஜகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது. குறிப்பாக, ஆளும் சிபிஎம் கட்சி அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் திரண்டு, இசை மற்றும் நடனத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாஜக மூத்த தலைவர் ஏ.டி.வி. கோபாலகிருஷ்ணன் மகிழ்ச்சியில் நடனமாடிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம், கொச்சின், பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட பல நகரங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள், வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே பேசிய ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி மைய அரசியல், ஊழல் இல்லாத நிர்வாகம் ஆகியவற்றுக்கான மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றிக்கு காரணம் எனத் தெரிவித்தார். மாற்றமும் முன்னேற்றமும் வேண்டுமென்ற எண்ணமே மக்கள் பாஜகவிற்கு ஆதரவளிக்கச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் முதன்முறையாக பாஜக ஒரு எம்பியை பெற்ற நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள கேரள பாஜக, வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி புதிய நம்பிக்கையுடன் தயாராகி வருகிறது.