வடகிழக்கு பருவமழை கேரளாவில் தீவிரமடையும் சாத்தியம் — 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை கேரளா மாநிலத்தில் தீவிரமடையும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தீவிர தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் தாக்கத்தால் கேரளாவில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் வாய்ப்பு அதிகம்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வங்காள விரிகுடாவிலும் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் உயரம் வரை மேல்மட்ட காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகும்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் அரசு ரூ.947 கோடி நிவாரண உதவி
மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ.947 கோடி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.563 கோடியும், மாநில பட்ஜெட்டிலிருந்து ரூ.384 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்த ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.