ஊழலில் குவிந்த பணத்தை மீட்டெடுத்தால் மாநிலத் திட்டங்கள் எளிதில் செயல்படுத்தலாம்!
தமிழகத்தில் திமுக அரசு செய்ததாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகளில் சம்பாதிக்கப்பட்ட பணத்தை மீட்டெடுத்தாலே, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் உட்பட பல முக்கியத் திட்டங்களை உடனே செயல்படுத்த முடியும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:
டெண்டர் ஒப்பந்தங்களில் பெரும் தவறுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை, மாநில DGPக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது. இது, பொதுக்கழிப்பறை கட்டுமானங்களில் இருந்து நபார்ட் நிதியுதவி பெறும் திட்டங்கள் வரை, பல துறைகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதற்கான உறுதியான சான்று என அவர் விமர்சித்தார்.
அரசு நிர்வாகத்தை “ஸ்டாலின் மாடல்” என விளம்பரம் செய்யும் திமுக ஆட்சியின் இயல்பு, உண்மையில் கமிஷன் மற்றும் வசூல் நடைமுறைகளில் மட்டுமே தங்கியுள்ளது என்றும் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
திமுக அமைச்சர்கள் மூலம் சேர்க்கப்பட்ட ஊழல் பணத்தை முழுமையாக மீட்டெடுத்துவிட்டால், தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு எளிதில் செயல்படுத்தும் திறன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு, திமுகவின் ஊழல் வட்டத்தில் இருந்தவர்கள் யார் என்றாலும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது உறுதி என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.