மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு – நடப்பாண்டில் ஏழாவது முறையாக நிரம்ப வாய்ப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து பெரிதும் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 119 அடி அளவை எட்டியுள்ளது. இதனால், நடப்பாண்டில் ஏழாவது முறையாக மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை அடைய வாய்ப்பு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் ஆகியவற்றின் காரணமாக, மேட்டூர் அணை இதற்கு முன் ஆறு முறை 120 அடி முழு கொள்ளளவை எட்டியிருந்தது.
சில வாரங்களுக்கு முன் காவிரி நீர்வரத்து குறைந்ததுடன், டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்திருந்தது. ஆனால், தற்போது மழை மீண்டும் பலமாக பெய்ததால், அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் விநாடிக்கு 9,026 கனஅடி அளவில் இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,374 கனஅடியாக உயர்ந்தது.
அதேநேரம், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாசனத்துக்கான தேவையும் குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து தற்போது டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, மேலும் கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
இதனால், திறப்பைவிட வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நீர்மட்டம் 118.55 அடியில் இருந்து 119 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 91.17 டிஎம்சியில் இருந்து 91.88 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் மேலும் அதிகரித்து முழுக் கொள்ளளவை எட்டும் சாத்தியம் உள்ளதால், நீர்வளத் துறை அதிகாரிகள் அணையின் 16 கண் மதகு பகுதியில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.