பச்சிளம் குழந்தைகளின் குரல் நல்லதாக வரும் என்ற நம்பிக்கையில் கழுதைப் பால் கொடுப்பது ஆபத்தானது என்றும், அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தை நல மருத்துவ நிலைய இயக்குநர் மருத்துவர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா நவம்பர் 15 முதல் 21 வரை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் கணேஷின் தலைமையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை மருத்துவமனை டீன் அரவிந்த் வெளியிட்டார். நிகழ்வில் பங்கேற்ற மருத்துவர்கள், புதிதாக தாயான பெண்களிடம் அவர்கள் கொண்டிருந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மருத்துவர் கணேஷ் கூறியதாவது:
- புதிதாகப் பிறக்கும் குழந்தையை சூடாக இருக்கும்படி சரியான ஆடைகளால் போர்த்த வேண்டும்.
- குழந்தை பிறந்தவுடன் உடனே தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் தொடங்கப்பட வேண்டும்.
- முதல் 180 நாட்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தருவது மிக முக்கியம்.
- பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று நாட்களில் வரும் சீம்பால் போதுமானதே; அது குறைவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
- ஒரு முறை குறைந்தது 15–20 நிமிடங்கள் தாய்ப்பால் குடிக்க வேண்டும்.
- ஒரு நாளில் 6 முறை அல்லது அதற்கு மேல் சிறுநீர் கழித்தால் குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைக்கிறது என அர்த்தம்.
மேலும் அவர் கூறிய முக்கிய எச்சரிக்கைகள்:
- தாயின் உணவு மற்றும் குழந்தையின் மஞ்சள் காமாலை இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
- ஒரு வயது வரை வைட்டமின்–டி சொட்டு மருந்து கட்டாயமாக கொடுக்க வேண்டும்.
- தொப்புள் கொடி உதிர்ந்தவுடன் குளிப்பதற்கு தடையில்லை.
- தடுப்பூசிகளை அட்டவணைப்படி நேரத்துக்கு ஏற்ப போட வேண்டும்.
தவறான நம்பிக்கைகள் குறித்து அவர் எச்சரித்தது:
- வாயில் கை போட்டால் “சனி” எடுத்துவிட வேண்டும் என்ற நம்பிக்கை தவறு.
- விக்ஸ் தலையிலும் மார்பிலும் தடவக்கூடாது.
- கற்பூர இலை, முசுமுசு இலை, பெருங்காயம் போன்றவற்றை கலந்து வாயில் விடுவது புறை ஏறி நெஞ்சில் சளி அடைப்பு உருவாகி உயிருக்கு ஆபத்தாகலாம்.
- நாக்கில் வசம்பு தடவக் கூடாது.
- மலம் கழிக்கவில்லை என்று முருங்கை குச்சி, வெற்றிலை காம்பு போன்றவை வைப்பது தவறு.
- குழந்தை அழுவதை தடுக்க பிளாஸ்டிக் சூப்பானை பயன்படுத்தக் கூடாது.
- “குரல் நன்றாக வரும்” என்று கழுதைப் பால் கொடுப்பதும் முற்றிலும் தவறு.
- வயிற்று வலிக்கு “க்ரைப் வாட்டர்” கொடுக்கக்கூடாது.
- தாய்ப்பால் குறைவானது என்ற நம்பிக்கையில் பசும்பால், பவுடர் பால் போன்றவற்றை தருவதும் சரியல்ல. மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
- கண் மை வைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
உடனடி மருத்துவ கவனிப்பை தேவைப்படுத்தும் அறிகுறிகள்:
- தாய்ப்பால் குடிக்காமல் இருத்தல்
- அதிகமான அழுகை அல்லது சோர்வு
- உடல் வெப்பநிலை அதிகம்/குறைவு
- பிறந்த 24 மணிநேரத்தில் மஞ்சள் காமாலை
- 48 மணிநேரத்திற்குள் சிறுநீர் கழிக்காமை
- வாந்தி
- வாயிலிருந்து நுரை
- தோல் நீல நிறமாகுதல்
- சளி, புறை ஏறுதல்
- மூச்சுத் திணறல்
- வலிப்பு
இந்த அறிகுறிகளில் ஏதாவது இருந்தால் உடனே குழந்தை நல மருத்துவர்களை அணுக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.