தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பான வழக்கில், டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “டீசல் விலை உயர்வு, அரசு வழங்கும் இலவச பயண பாஸ்கள் உள்ளிட்ட காரணிகளால் கட்டணத்தை உயர்த்த தேவையானது” என்று கோரப்பட்டது. மனுவின் அடிப்படையில், தனியார் பேருந்து கட்டணத்தை மாற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
2024 டிசம்பர் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, உள்துறை, போக்குவரத்து மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ள உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கூட்டமும் நடைபெற்றிருந்தது, ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு வழக்கு விசாரணை நடைபெறும்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் ஷாஜஹான் ஆஜராக, இதுவரை 950 பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்ய கூட்டம் நடத்தி, டிசம்பர் 30-ஆம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதி செய்தனர்.
நீதிபதி வழக்கை முடித்துவைத்து, அரசு எடுக்கும் இறுதி முடிவை 2026 ஜனவரி 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.