“எங்களுக்கு எதிரிகள் இல்லை என சொல்ல மாட்டோம். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். மீண்டும் 2.0 முதல்வராக ஸ்டாலின் வருவது உறுதி” என்று சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதனை கூறினார். 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையை திருநெல்வேலிக்கு கொண்டுவந்த குழுவினரை வரவேற்கும் விழா வாணியம்பாடி வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியாவைச் சேர்த்து அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது.
கோப்பையை அறிமுகப்படுத்தும் வாகனப் பயணம் தற்போது மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார் தலைமையில் அப்பாவு கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார். மேலும் காங்கேயம் காளை “லோகா” வையும் போட்டியின் மாஸ்காடாக அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
மத்திய நிதியமைச்சர் 13 முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட்டதாக கூறியிருந்தாலும், இம்முறை நடக்கும் திருத்தம் முந்தையவற்றிலிருந்து மாறுபட்டதாகும். தேர்தல் ஆணையம் சுயாதீன அமைப்பாக இருக்க வேண்டிய நிலையில், இப்போது மத்திய அரசின் கட்டளைகளின் படி செயல்படும் அமைப்பாக மாறியுள்ளது. இதை திமுக எதிர்க்கிறது.
பிஹாரில் தேர்தலுக்கு முன் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டதைப் பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம், 12 மாநிலங்களில் பல வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இது தேர்தல் செயல்முறையில் சந்தேகத்தை எழுப்புகிறது என அவர் கூறினார்.
மத்திய நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் விமர்சித்தார். “சர்வசிக்ஷா அபியான், வெள்ள நிவாரண நிதி ஆகியவை மத்திய அரசால் நிறுத்தப்பட்டன. குஜராத்துக்கு விளையாட்டு மேம்பாட்டுக்காக ரூ.663 கோடி வழங்கிய நிலையில், தமிழகத்திற்கு போதிய நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் எந்தத் திட்டத்துக்கும் தமிழக அரசு தடையாக இல்லை,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது, ஆனால் டெல்லியில் அமைதியின்மை நிலவுகிறது. குளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக நிர்மலா சீத்தாராமன் கூறியதை மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்கள் தமிழக பாஜகவை எதிர்க்கவில்லை; மத்திய பாஜக அரசின் கொள்கைகளையே எதிர்க்கிறோம்.”
“எந்தச் சூழலிலும் தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயார். 2026 தேர்தலில் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் 2.0 அரசு அமைவது உறுதி. தேர்தல் ஆணையத்தின் சதியை முறியடிக்க திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசன், 400 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற எட்வினா ஜெய்சன், துணை மேயர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.