மாலியில் தீவிரவாதிகள் கடத்திய 3 தமிழர்கள்: குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளிடம் உதவி கோரிக்கை
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் உட்பட ஐந்து இந்திய தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நிலவி வருகிறது. அங்கு அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருவதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்தி பிணையாக வைத்திருக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், மாலியின் கோப்ரி நகரில் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5 இந்திய தொழிலாளர்களை, ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் கடந்த நவம்பர் 6ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்டவர்களில் மூவர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள்:
- புதியவன் (52) – கொடியன்குளம்,
- பொன்னுத்துரை (41) – நாரைக்கிணறு,
- முத்துசாமி என்ற பேச்சிமுத்து (41) – கலப்பைப்பட்டி.
மீதமுள்ள இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்:
- இசக்கிராஜா (36) – முத்துகிருஷ்ணாபுரம்,
- தளபதி சுரேஷ் (26) – கண்மணிபுரம்.
இந்த சம்பவம் கடந்த வாரமே நடந்திருந்தாலும், அது குறித்து குடும்பத்தினருக்கு தற்போது தான் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு, தங்களது உறவினர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர், “இந்த விவகாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு அரசு விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும்,” என்று தெரிவித்தார்.
மாலியில் நடைபெற்ற இந்த சம்பவம், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.