‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ – மூன்று கதைகளை இணைக்கும் படைப்பு: இயக்குநர் கே.பி. ஜெகன்
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ போன்ற படங்களை இயக்கிய கே.பி. ஜெகன், தற்போது ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் அவர் கதாநாயகனாகவும் இருக்கிறார்.
மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ போன்ற பல படங்களில் நடித்துள்ள ஜெகனுடன், ‘பிக் பாஸ்’ விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய பங்கில் எம்.எஸ். பாஸ்கர் நடிக்கிறார். ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எஸ்.கே. செல்வகுமார் இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.
படத்தைப் பற்றி ஜெகன் கூறியதாவது:
“இப்படத்தின் சிறப்பு மூன்று தனித்தனி கதைகள் ஒரே பாதையில் இணைந்து செல்லும் விதமாக அமைந்திருப்பது. ஒவ்வொரு கதைக்கும் ஒன்று என மூன்று பாடல்கள், மேலும் அந்த மூன்றையும் இணைக்கும் நான்காவது பாடலும் இடம்பெறும். பாடல்களும் பின்னணி இசையும் இந்த படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும். படப்பிடிப்பு பெரும்பாலும் திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு பகுதிகளில் நடைபெற்றது. இறுதி கட்ட படப்பிடிப்பு நவம்பரில் சென்னையில் நடைபெற்று முடியும்” என்றார்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சேரன் மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.