யோகா செய்வதால் என்ன நன்மை? உடலளவிலும் மனதளவிலும் விழிப்புணர்வு தரும்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!
மதுரை:
யோகாவை நமது தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டால், உடலளவில் தகுதியுடனும், மனதளவில் எப்போதும் விழிப்புடனும் இருக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மதுரை வேலம்மாள் பள்ளிகள் குழுமம் சார்பில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வேலம்மாள் குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தில் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற தலைப்பில் பிரம்மாண்ட யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஐந்து வேலம்மாள் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 200 பள்ளிப் பணியாளர்கள் ஒன்றிணைந்து ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
பிரதமரின் கடின உழைப்புக்கு யோகாவே காரணம்:
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுடன் இணைந்து யோகா பயிற்சியை முறைப்படி வழிநடத்தினார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது தினசரி கடமைகளுக்கு இடையே நாளும் தவறாமல் யோகா பயிற்சி செய்து வருகிறார். அதன் காரணமாகவே, அவரால் எந்நேரமும் சுறுசுறுப்புடனும், நாட்டின் நலனுக்காகத் தொடர்ந்து மிகக் கடினமாகவும் உழைக்க முடிகிறது” என்று பிரதமரின் வாழ்வியல் முறையை உதாரணமாகச் சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.




