திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி தவெக அரசு மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
சென்னை:
கடந்த கால திமுக அரசின் நிதி நிர்வாகத் தவறுகளையும், மாநிலத்தின் கடன் சுமையையும் காரணம் காட்டி, தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு மக்கள் நலத் திட்டங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், தேர்தலின் போது தவெக அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்து சட்டமன்ற உரையில் முதலமைச்சர் இதுவரை ஒரு வார்த்தைக் கூடப் பேசாதது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் சுமை சிதம்பர ரகசியம் அல்ல:
தொடர்ந்து முதலமைச்சரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், “மாநிலத்தின் கடனைக் காரணம் காட்டி, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே கிடப்பில் போடுவதற்கு நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக எப்படியெல்லாம் சிதைத்து, மக்களின் தோள்களின் மீது கடன் சுமையைக் கூட்டி வைத்திருந்தது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. நேற்றைக்கு வந்த தவெக புலனாய்வு செய்து இதைப் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை; பல அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த வெட்ட வெளிச்சமான விஷயம். இவ்வளவு ஏன், தேர்தல் பிரச்சாரத்தின் போது இதே பொருளாதாரக் கடனைச் சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்து வாக்குச் சேகரித்தவர் தானே நீங்கள்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
வாக்குறுதிகளில் சமரசம் செய்தால் பாஜக வேடிக்கை பார்க்காது:
தமிழகம் கடுமையான கடன் சுமையில் தவிக்கிறது என்று முன்பே தெரிந்திருந்தும், முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே மையமாகக் கொண்டு, திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், மாதம் ரூ. 2,500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 நிதியுதவி மற்றும் பயிர்க்கடன் முழுமையான தள்ளுபடி என இத்தனை வாக்குறுதிகளைத் தேர்தலின் போது எதற்காக வாரி இறைத்தீர்கள் என்றும், மாற்றம் தருவோம் என மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். “முதல்வரே, நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே, திமுக விட்டுச் சென்ற கடனைக் காரணம் காட்டி, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதனை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவின் வாயிலாகத் தவெக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.





