தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை: விடிய விடிய பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!
தாம்பரம்:
சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மின்தடையைக் கண்டித்து, பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர், வி.ஜி.பி. பொன் நகர், மணவாளன் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நேற்று நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்தது. இதனால் புழுக்கம் தாங்காமலும், அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டதாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்தும், மின்சாரத்தைச் சீரமைக்க எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர்.
போக்குவரத்து பாதிப்பு – அதிகாரிகளுடன் வாக்குவாதம்:
மின்வாரியத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, திரளான பொதுமக்கள் தாம்பரம் – வேளச்சேரி முக்கியச் சாலையில் திரண்டனர். தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையின் குறுக்கே நிறுத்தி, போக்குவரத்தை முடக்கி அதிரடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வந்து இந்தத் தொடர் மின்தடைக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இதற்கிடையே, இதேபோல் உள்ளகரம் இளங்கோ தெரு பகுதியிலும் நேற்று மாலை சுமார் 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியுற்றது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் பகுதியில் மறியல் நீடித்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், மின் அதிகாரிகளும் பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சாரம் உடனடியாக விநியோகிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.




