பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தரக்குறைவாகப் பேசிய விவகாரம்: தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது அதிரடி கைது!
சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசிய புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமதுவை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பா.ஜ.க பிரமுகர் அலிஷா அப்துல்லா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் முக்கியப் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், யூடியூபர் முக்தார் அகமது மற்றும் தி.மு.க எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா ஆகிய இருவரும் இணைந்து, தனது கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மிகவும் ஆபாசமாகப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், முதல்கட்டமாகச் சூர்யா சிவாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சூழலில், வழக்கில் தேடப்பட்டு வந்த யூடியூபர் முக்தார் அகமது போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகக் கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்தார். தனிப்படை அமைத்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்த சென்னை போலீசார், தற்போது கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்தார் அகமதுவைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அவரிடம், இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





