இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த தருணம்: பிரதமர் மோடி
இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் புதுமைகளை உருவாக்குவதற்கும் இதுவே சிறந்த காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள யஷோபூமி மையத்தில் நடைபெற்ற இந்தியா மொபைல் மாநாட்டை நேற்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
“மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் மொபைல் போன்கள், செமிகண்டக்டர்கள், மின்னணுவியல் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி வேகத்தை அரசு துரிதப்படுத்தி வருகிறது,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்தியாவில் முதலீடு செய்யவும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இதுவே சரியான நேரம். ஜனநாயக அமைப்பு, அரசின் முன்னேற்றமான கொள்கைகள் மற்றும் வணிகத்திற்கான எளிமையான சூழல் ஆகியவை இந்தியாவை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய நாடாக மாற்றியுள்ளன.”
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் துறையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இன்று 1 ஜிபி டேட்டா ஒரு கப் தேநீரின் விலையைவிட குறைவாக கிடைக்கிறது.
2ஜி காலத்தில் இருந்த நாடான இந்தியா, இன்று 5ஜி சேவை கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைந்துள்ள நிலையில் உள்ளது. டிஜிட்டல் இணைப்பு இப்போது ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது.
மேலும், நிதி மோசடி பாதுகாப்பு, குவாண்டம் தகவல் பரிமாற்றம், 6ஜி தொழில்நுட்பம், ஒளிக் கம்பி இணைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி போன்ற பல முக்கிய துறைகளில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.
“மொபைல், தொலைத்தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறைகளில் உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது,” எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.