கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!
பெங்களூரு:
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவரது கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் தீவிரப் பிரச்சாரத்தால் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அப்போது முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் சிவகுமார் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என காங்கிரஸ் மேலிடம் சமரச ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்பட்டது.
தற்போது சித்தராமையா முதலமைச்சராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடத்திய முக்கிய ஆலோசனைக்குப் பிறகு அவர் தனது பதவியை விட்டுக்ொடுக்க முன்வந்துள்ளார். இதனிடையே, இன்று பெங்களூருவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சர்களுக்குச் சித்தராமையா காலை விருந்து அளித்தார். இந்த விருந்தின் போது, தான் கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதாக அவர் முறைப்படி அறிவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், அங்கிருந்த துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மூத்த தலைவரான சித்தராமையாவின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். உடனே அவரை நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவிக்கொண்ட சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்குத் தனது முழு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்த அதிரடி நகர்வை அடுத்து கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





