“உழைப்புக்கேற்ற ஊதியம் தந்தால் கூடுதலாக ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டோம்” – திருவாரூர் ஆட்சியரிடம் மனு அளித்து டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு அதிரடி முழக்கம்!
திருவாரூர்: “டாஸ்மாக் கடைகளில் ஏற்படும் தினசரி செலவினங்கள் அனைத்தையும் நிர்வாகமே ஏற்றுக்கொண்டு, ஊழியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கினால், மதுபாட்டில்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்க மாட்டோம்” என டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாகத் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தங்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கக் கோரி, டாஸ்மாக் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், தங்களின் தற்போதைய அவல நிலை குறித்துப் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்குக் கடந்த 23 வருடங்களாக வெறும் ரூ.16,850 மற்றும் விற்பனையாளர்களுக்கு ரூ.14,530 மட்டுமே தற்காலிக ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், கடைகளின் அளவிற்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை மட்டுமே வாடகைத் தொகையை வழங்கும் டாஸ்மாக் நிர்வாகம், கடைகளுக்கான மின் கட்டணத்தை (Electricity Bill) வழங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இதோடு மட்டுமின்றி, கடைகளில் விற்பனையின் போது தவறுதலாக உடையும் மதுபாட்டில்களால் நாள் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.1,000 வரை இழப்பு ஏற்படுவதாகவும், ஒட்டுமொத்தமாக ஒரு கடையை அன்றாடம் வழிநடத்துவதற்குச் சராசரியாக ரூ.5,000 வரை கூடுதல் செலவாகிறது என்றும் குறிப்பிட்டனர். இந்தத் தொகையைத் தங்களின் சொந்தப் பணத்தில் இருந்தே செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட ஊழியர்கள், நிர்வாகம் இந்தச் செலவுகளை ஏற்றுக்கொண்டு தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் பலத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.



