ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும்; நாட்டின் ஜிடிபி-யும் உயரும் – நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.பி.சவுத்ரி!
காந்திநகர்: “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசுக்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும்” என நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் இத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் இந்த பெருந்தொகையை, மக்களின் நலத்திட்டங்களுக்கும், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் என்று கூறினார்.
மேலும், நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 1.6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய பி.பி.சவுத்ரி, “அடிக்கடி தேர்தல்கள் நடைபெறும் போது தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அடிக்கடி அமலுக்கு வருகின்றன. இதனால் அரசு அறிவிக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், இத்தகைய நிர்வாகத் தேக்க நிலைகள் மற்றும் பாதிப்புகள் முற்றிலும் இல்லாமல் போகும்” என்று விரிவாக விளக்கம் அளித்தார்.





