“வண்டியில் இடமில்லையா?” – சனாதன விவகாரத்தில் அண்ணாமலை கடும் விமர்சனம்!
சென்னை: சனாதன தர்மம் குறித்த விவகாரத்தில் நிலவி வரும் அரசியல் மோதல்களுக்கு இடையே, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புளித்துப்போன இந்த விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சனாதன தர்மமும், இந்து மதமும் வெவ்வேறானவை அல்ல என்று அவர்களின் சித்தாந்தத் தலைவரே (Owner) கூறிவரும் நிலையில், இப்போது மட்டும் ஏன் முரண்பட்ட விளக்கங்களைத் தருகிறீர்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “தேர்தலுக்கு முன்னதாகப் பிரச்சாரத்திற்குச் சென்றபோது, இதேபோல் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கலாமே? அப்போது ஏன் உங்களது சித்தாந்த குருநாதரை உடன் அழைத்துச் செல்லவில்லை? நீங்கள் அவ்வளவு தைரியமான ஆள் ஆயிற்றே, அப்போது ஏன் உங்கள் வண்டியில் அவருக்கு இடமில்லையா?” என்று கிண்டலாகவும், ஆவேசமாகவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் காலத்தில் ஒரு நிலைப்பாடும், அதற்குப் பிறகு மற்றொரு விளக்கமும் அளிப்பது பொதுமக்களிடையே எடுபடாது என்றும், உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




