மேற்காசிய போர் சூழலிலும் இந்தியாவில் எரிபொருள் விலை கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்
புதுடெல்லி:
மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு முக்கிய காரணம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலக நாடுகள் அனைத்தும் எரிபொருள் விலை உயர்வால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், இந்தியா அதனைத் திறம்பட கையாண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
உலகளவில் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையானது 20 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் மத்திய அரசின் முறையான நடவடிக்கைகளால் பெட்ரோல் விலை 3.2 சதவீதமும், டீசல் விலை 3.4 சதவீதமும் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலர்களைத் தாண்டியபோது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த போதிலும், மக்கள் நலன் கருதி விலையை பெருமளவு உயர்த்தாமல் தடுத்து நிறுத்தியதே பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பொறுப்புணர்வு மிக்க நற்பணி என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையையும், மக்களின் தேவையையும் ஒருசேர பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது பேட்டியில் தெரிவித்தார்.





