மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குகள் பதிவு – விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, எஞ்சியுள்ள 142 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 41,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டத் தேர்தலின் போது சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவானதால், இன்றைய தேர்தலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 27,300 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணித்து வருகின்றனர். காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வம் காட்டி வருவதால், வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.




