டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!
தொழில்நுட்ப வளர்ச்சியை ஆளுமையில் திறம்படப் பயன்படுத்தி வரும் திரிபுரா மாநில அரசு, தனது அலுவலகங்களை ‘இ-ஆபீஸ்’ (E-OFFICE) ஆக மாற்றியதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சரவையையும் ‘இ-கேபினட்’ (E CABINET) ஆக மாற்றி சாதனை படைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மாணிக் சாஹா தலைமையிலான இந்த அதிரடி மாற்றத்தின் மூலம், அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் காகிதங்களின் பயன்பாடின்றி ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படுகின்றன.
கடந்த காலங்களில் அரசு அலுவலகங்களில் காணப்பட்ட கோப்புச் சுமைகள் மற்றும் பழைய ஆவணங்களைத் தேடுவதில் நிலவிய தாமதங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் 2023-ஆம் ஆண்டு முதல் ‘இ-ஆபீஸ்’ திட்டம் அங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பக்கங்களைக் கொண்ட ஒரு லட்சம் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆவணங்களையும் ‘இ-ஃபைல்’களாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட ஆட்சியரகம் முதல் கிராம பஞ்சாயத்து வரை அனைத்துப் பிரிவுகளையும் டிஜிட்டல் சங்கிலியால் இணைத்துள்ளதன் மூலம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பை உறுதி செய்து, டிஜிட்டல் ஆளுமைப் போட்டியில் (E-GOVERNMENT RACE) முன்னிலை வகிக்கும் திரிபுராவின் இந்த முயற்சி, கால விரயத்தைத் தவிர்ப்பதுடன் பொதுமக்களுக்கான சேவையை விரைவுபடுத்தியுள்ளது.



