ஏற்காட்டில் பரபரப்பு: ₹8,000 மதிப்பிலான கூப்பன்களை விநியோகிக்கும் திமுகவினர் – தேர்தல் ஆணையம் மெத்தனமாக இருப்பதாகப் புகார்!
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பயன் அளிக்கும் வகையிலான கூப்பன்களை விநியோகம் செய்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், மகளிரைக் கவரும் வகையில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை முன்னிறுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுகவினர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வழங்கப்பட வேண்டிய கூப்பன் மாதிரிகளை தற்போதே அச்சிட்டு வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி, சேசஞ்சாவடி, அயோத்தியாபட்டினம், காரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் திமுகவினர், இந்த 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன்களைப் பெண்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த மெத்தனப் போக்கு ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதாகப் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.




