தேர்தல் விதிமீறல்: உரிய அனுமதியின்றி பரப்புரை செய்த திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி, தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கண்டாச்சிபுரம் பகுதிக்கு வருகை தந்த அவருக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கூட்டத்தைக் கூட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது காவல் துறையினர் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







