கடலூரில் விழிப்புணர்வு: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆமை வடிவ மணற்சிற்பம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட மணற்சிற்பம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் முறைப்படி தொடங்கி வைத்தார். வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், கடற்கரை மணலில் ‘ரிட்லி ஆமை’ வடிவில் கலைநயமிக்க மணற்சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதனுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஜனநாயகக் கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.




